Home / கட்டுரை / பேரழிவுகள் !

பேரழிவுகள் !

உலகலாவிய ரீதியில் பெரும்பான்மை மக்கள் இறைநிராகரிப்பாளர்கள் அல்லது இணைவைப்பாளர்களாகவே இருக்கின்றார்கள்!


உலக மக்கள் தொகையில் மதரீதியான கணிப்பில் கிறிஸ்தவர்கள் தான் அதிகமாக இருப்பதாக அவர்கள் சார்ந்த ஆய்வுகள் கூறிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக கிறிஸ்தவர்களிடம் மதரீதியான வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு குறைவாக காணப்பட்டாலும் டிசம்பர் மாதத்தின் 25ஆம் திகதி மட்டுமாவது உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவரும் ‘தேவனுக்கு மகன் இருக்கின்றான்’ என்ற கொள்கையை பிரதிபளிக்கும் வகையில் ஒரே குரலில், ‘எல்லாம் வல்ல இறைவனுக்கு குமாரன் இருப்பதாக’ அபாண்டத்தை பிரஸ்தாபித்து தமது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த உலகின் பெரும் எண்ணிக்கையான மக்கள் உரத்த குரலில் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் இந்த மாபெரும் அநியாத்தை தாங்க முடியாமல் ‘நாம் வாழும் பூமி பிளந்து, நாம் பார்க்கும் வானம் வெடித்து, எம்மை சூழவுள்ள மலைகள் சிதறுண்டு விட முனைகின்றன’ என்று எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு ஞாபகப் படுத்துகின்றான்.

இணைவைப்பின் விளைவாக ஏற்படும் பேரழிவு!

கிறிஸ்தவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் ஈஸா நபியின் தாய் மர்யம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் பெயரிலே அருளப்பட்ட அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

இன்னும், “அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ؕ‏

(அல் குர்ஆன்: 19:88)

“நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.

لَـقَدْ جِئْتُمْ شَيْــٴًـــا اِدًّا ۙ‏

(அல் குர்ஆன்: 19:89)

இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.

تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَـنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ‏

(அல் குர்ஆன்: 19:90)

அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்-

اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا‌ ۚ‏

(அல் குர்ஆன்: 19:91)

ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.

وَمَا يَنْۢبَـغِىْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا ؕ‏

(அல் குர்ஆன்: 19:92)

இந்த வசனம் பேரழிவுகள் இணைவைப்பு அதிகமதிகம் இடம் பெறும் இடங்களிலும், கிறிஸ்தவக் கொண்டாட்டங்கள் அதிகம் நிறைந்த இடங்களிலும் நிகழ்வதன் மூலம் யதார்த்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?

வெறுமனே “நான் முஸ்லிம்! நான் கிறிஸ்துமஸ் கொண்டாடங்களில் பங்குபெறவோ அல்லது வாழ்துக்களை பரிமாறவோ மாட்டேன்” என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டால் மாத்திரம் போதாதது!

மாறாக கிறிஸ்தவர்கள் உரத்த குரலில் இறைவனுக்கு இணைகற்பிக்கும் போது நாமும் குறிப்பாக இந்த தினங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஏகத்துவத்தை எடுத்தியம்பும் அல்குர்ஆனிய வசனங்களை ஓத வேண்டும்.

மேலும், அல்லாஹ்வின் வல்லமைகளையும் அவன் அதிகாரங்களையும் பற்றி சிந்தித்து அவனை ஞபாகப்படுத்த வேண்டும்.

மேலும் அவனை பேற்றக் கூடிய ஏகத்துவக் கலிமாவாகிய

لا إله الا الله وحده لاشريك له له الملك وله الحمد يحي ويميت وهو على كل شيء قدير “

“லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீது வஹுவ அல குல்லி ஷய்இன் கதீர்”

என்ற திக்ரை அதிமதிகம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

சூரத்துல் இஹ்லாஸை (அல் குர்ஆன்: 112) ஓதி அதன் விளக்கத்தை நமக்குல் பரிமாறிக் கொள்தன் மூலம் ஏகத்துவம் தொடர்பான விளக்கத்தையும் இணைவைப்பின் விபரீதங்களையும் தெளிவுபடுத்தலாம்.

ஸூரத்துல் இஃக்லாஸ் (112)(ஏகத்துவம்)

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ

(அல் குர்ஆன்: 112:1)

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏

(அல் குர்ஆன்: 112:2)

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ ۙ‏

(அல் குர்ஆன்: 112:3)

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ

(அல் குர்ஆன்: 112:4)

அதிமதிகம் ஓதி இதன் விளக்கதை அறிந்து கொள்ளக் கூடிய சூழலை நமது வீடுகளில் உருவாக்க வேண்டும்.

நமது சமுதாயத்தில் உள்ள இணைவைப்பை தீவிரமாக எதிர்ப்போம்!

முஸ்லிம் என்ற பெயரில் உலாவிக் கொண்டு, தரீக்காக்கள் மற்றும் அவுலியா வழிபாடு என்ற பெயரில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து மிகப்பெரும் பாவத்தை சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கும் நமது சமுதாய மக்களுக்கு மத்தியில் இணைவைப்பை ஒழிக்கும் முயற்சிகளில் அதிகமதிகம் இந்நாட்களில் ஈடுபட வேண்டும்.

மாற்று மதத்தவர்கள் செய்யும் இணைவைப்பை அறிந்து கொள்ளும் அதிகமான மக்கள் நமது சமுதாயத்தவர்கள் செய்து கொண்டிருக்கும் இணைவைப்பின் எத்தனையோ வடிவங்களை பற்றி சிந்திப்பதே கிடையாது. அதைவிட ஒரு படி மேலே சென்று அந்த இணைவைப்பையும் அங்கீகரிக்க கூடிய நிலையில் நாம் இருப்போமேயானால் நிச்சயமாக இறைவனின் தண்டனைகளுக்கு நாம் ஆளாக வேண்டிவரும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

நமது குடும்ப உறுப்பினர்களுக்கு இதன் விபரீதத்தை உணர்த்துவோம்!

நமது மனைவி, மக்களுக்கு நாம் ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது? வாழ்த்து தெரிவிக்க கூடாது? இந்த செயல் எந்த அடிப்படையில் ஏகத்துவத்திற்கு முரணானகின்றது? என்ற விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். இதன் தாத்பரியத்தை உணர்த்தும் முகமாக லுக்மானுல் ஹகீம் அவர்கள் தனது மகனுக்கு செய்த உபதேசத்தில் இணைவைப்புக்கு எதிரான பிரச்சாரத்தை முதன்மைப்படுத்தியதாக எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அல் குர்ஆனில் சுட்டிக்காட்டுகின்றான்.

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏

(அல் குர்ஆன்: 31:13)

நாம் அறியாமைக் காலத்தில் இணைவைப்பில் ஈடுபட்டிருந்தால் அதற்காக தவ்பா செய்து மீளுவோம்!

நாம் செய்த பாவங்களுக்காக, குறிப்பாக இணைவைத்தலில் நாம் ஈடுபட்டிருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் அழுது புலம்பி பாவமன்னிப்பு கோர வேண்டும்.

குறைந்தபட்சம் இந்த நடவடிக்கைகளில் முஸ்லிம்களாகிய நாம் ஈடுபடும் போது இறைவன் புறத்தில் இருந்து வரும் பேரழிவுகளில் இருந்து நம்மையும் நமது குடும்பங்கள் மற்றும் நமது சமுதாயத்தையும் காத்துக் கொள்ளலாம்.


எழுத்து : எம். றிஸ்கான் முஸ்தீன் மதனி.
அல் கப்ஜி, சவுதி அரேபியா.

Check Also

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ?

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ? தொகுப்பு : யாஸிர் ஃபிர்தௌசி அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம், …

Leave a Reply