Home / Uncategorized / நபி யூசுப் (அலை), மூஸா (அலை) இருவரது வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள்

நபி யூசுப் (அலை), மூஸா (அலை) இருவரது வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள்

நபி யூசுப் (அலை), மூஸா (அலை) இருவரது வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள்…

யூசுப் நபியின் வரலாற்றை கூற முற்பட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பெயரிலே ஒரு அத்தியாயத்தை (12 வது அத்தியாயம் ஸூரத்து யூஸுஃப் ) இறக்கி அதன் ஆரம்ப வசனங்களில் أحسن القصص மிக அழகிய வரலாறு என்று குறிப்பிடுகின்றான்.
மூஸா நபியின் வரலாற்றை سورة القصص வரலாறு என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தை (28 வது அத்தியாயம் ஸூரத்துல் கஸஸ் – வரலாறுகள் ) இறக்கி அவ்வத்தியாயம் மற்றும் அல்குர்ஆன் நெடுகிலும் குறிப்பிடுகின்றான்.

  •  இரண்டு நபிமார்களும் எகிப்தில் வாழ்ந்தனர்.
  •  நபி யூசுபின் வரலாறு தாய் இல்லாமல் அவர்களது தந்தையுடன் தொடர்பு படுகின்றது.
  • நபி மூஸாவின் வரலாறு தந்தை இல்லாமல் அவர்களது தாயுடன் தொடர்பு படுகின்றது.
  • இருவரும் சிறுபிராயத்தில் குடும்பத்தை பிரிந்தனர்.
  • நபி யூசுப் பல வருடங்கள் தனது தந்தையை பிரிந்து வாழ்ந்தார்கள். நபி மூஸா சில மணிநேரங்கள் தனது தாயை பிரிந்து வாழ்ந்தார்கள்.
  • இருவரும் எறியப்பட்டனர். நபி யூசுப் பாலடைந்த கிணற்றில் எறியப்பட்டார். நபி மூஸா ஆற்றில் எறியப்பட்டார்.
  • நபி யூசுபின் மீது இருந்த குரோதத்தின் காரணமாக அவரது சகோதரர்களால் கிணற்றில் எறியப்பட்டார். அவரை ஓர் ஆழமான கிணற்றில் எறிந்துவிடுங்கள்… (12:10).
  • நபி மூஸா (அலை) அவர்களின் மீது உள்ள பாசத்தின் காரணமாக அவர்களது தாய் அல்லாஹ்வின் கட்டளையுடன் ஆற்றில் எறிந்தார்கள். நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு..(28:7)
  • யூசுப் நபியை எறிந்தது மனிதர்களின் முடிவின் வெளிப்பாடு, மூஸா நபி எறியப்பட்டது மனிதர்களின் இறைவனின் முடிவின் வெளிப்பாடு.
  • நபி யூசுப் நீர் இருந்த ஆலமான கிணற்றில் இருந்து வெளியேற்றப்பட்டார். நபி மூஸா நீர் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் மிதந்து வந்த பெட்டியில் இருந்து வெளியேற்றப்படட்டார்.
  • இருவருமே பிரபல்யமானவர்களின் கோட்டைகளில் வாழ்ந்தனர்.
  • மூஸாவின் தாய் அவரை நினைத்து ஆழ்ந்த கவலையில் இருந்தார்கள். யூசுபின் தந்தையும் மகனை நினைத்து ஆழ்ந்த கவலையில் இருந்தார்கள்.
  • மூஸாவை நாம் வளர்த்து ஆளாக்குவோம் என்று கோட்டையின் உரிமையாளரின் மனைவி   சொன்னார். யூசுப் நாம் வளர்த்து ஆளாக்குவோம் என்று கணவன் தனது மனைவியிடம் சொன்னர்.
  • இருவரது வரலாற்றுக்கும் மிக நீண்ட கால இடைவெளி இருந்தும் இருவரையும் பெற்றுக் கொண்டவர்கள் ஒரே வாசகத்தை பயன்படுத்தியதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
  • ஒருவேளை இவர் (மூஸா நபி) நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்’ என்று கூறினார். (12:21) நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்’ என்று சொன்னார்; (28:9)
  •  யூசுப் நபியின் பாசமிக்க சகோதரன் புன்யாமீன். (பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யூஸுஃப்)..(12:69) மூஸா நபியின் பாசமிக்க சகோதரன் ஹாருன். இன்னும்; “என் சகோதரர் ஹாரூன் – அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். .. (28:34)
  • மூஸா நபியை பாதுகாப்பதில் கோட்டையின் உரிமையாளரின் மனைவி முன்னின்றார்கள். யூசுப் நபிக்கு நோவினை மற்றும் தொல்லைகள் கொடுப்பதில் கோட்டையின் உரிமையாளரின் மனைவி  முன்னின்றால்.
  • இருவரும் பருவ வயதை அடைந்ததைப் பற்றி ஒரே தொனியில் அல்குர்ஆன் பேசுகின்றது. இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியைம் அளித்தோம் – இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம். (28:14) அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். (12:22)
  • யூசுப் விபச்சாரத்தினால் கோட்டைக்குள்ளே சோதிக்கப்பட்டார். மூஸா கொலை குற்றத்தினால் கோட்டைக்கு வெளியே சோதிக்கப்பட்டார்.
  • யூசுப் குற்றம் செய்யாமலே சிறையில் அடைக்கப்பட்டார். மூஸா கொலை குற்றத்தில் அகப்பட்டு ஊரை விட்டே வெளியேறிச் சென்றார்.
  • யூசுபுக்கு சாதகமாக ஒருவர் சாட்சி சொன்னார். அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்; (12:26) மூஸாவுக்கு எதிராக ஒருவர் சாட்சி சொன்னார். ‘மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். (28:19)
  • இருவருமே இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்டனர்.
  • மூஸாவின் தாயின் கவலையை பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது..(28:10) யூசுபின் தந்தையின் கவலையை பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன – பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார். (12:84)
  • ஒரு சகோதரி ஆயிரம் சகோதரர்களை விட சிறந்தவளாக இருக்கலாம் யூசுபுடைய சகோதரர்கள் அவரை நோவினைப் படுத்தி கிணற்றில் எறிந்தனர்.
    மூஸாவுடைய சகோதரி அவரை தேடிச் சென்று அவருக்கு உதவியும் செய்தாள்.
  • மூஸாவின் நிலையை தேடிப்பார்க்குமாறு மூஸாவின் தாய் தனது மகளுக்கு கட்டளையிட்டார்கள். இன்னும் மூஸாவின் சகோதரியிடம்; “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள். (28:11).
  • யூசுபின் நிலையை தேடிப்பார்க்குமாறு யூசுபின் தந்தை தனது ஆண்மக்களுக்கு கட்டளையிட்டார்கள். “என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்;..(12:87)
  • மூஸாவின் தாயின் கவலை மூஸாவைக் கண்டதும் இல்லாமல் போனது. இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் – எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள் (28:13).
  • யூசுபின் தந்தையின் கவலை யூசுபைக் கண்டதும் இல்லாமல் போனது. (அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்;..(12:94).
  • இருவருமே நம்பிக்கைக்குறியவர் என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். யூசுப் நபியவர்கள்: ‘நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்’ என்று கூறினார் (12:54).
  • மூஸா நபியவர்கள்: அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; ‘என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.’ (28:26)
  • இக்கட்டான சூழ்நிலையின் போது இருவரும் கேட்ட பிரார்த்தனையை பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். நபி யூசுப்: (அதற்கு) அவர் ‘என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால்இ நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்’ என்று (பிரார்த்தித்தவராக) கூறினார் (12:33).
  • நபி மூஸா: பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; ‘என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்’ என்று கூறினார். (28:24)
  • யூசுப் நபியுடைய விடயத்தில் அரண்மனை பெண் வெக்கம் கெட்டவளாக நடந்து கொண்டாள்.
    அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) ‘வாரும்’ என்று அழைத்தாள் (12:23).
  • மூஸா நபியுடைய விடயத்தில் அந்த இரு பெண்களும் நாணனத்துடன் கண்ணியமாக நடந்து கொண்டனர்.
    (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து ‘எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்’ என்று கூறினார்;.. (28:25)
  • இருவரையும் மீட்டுத் தருவதாக அகிலத்தாரின் இரட்சகன் வாக்களித்தான்.
  • நபி மூஸா: நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம். (28:7).
  • நபி யூசுப்: “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார், (12:96)
  • மூஸா வாழ்ந்த கோட்டையில் இருந்தவர்கள் அவரோடு முறன்பட்டு அவரை கோட்டையில் இருந்து துரத்தினர். “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமெ ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! (28:20).
  • யூசுப் வாழ்ந்த கோட்டையில் இருந்தவர்கள் அவரை கன்னியப்படுத்தி அவருக்கு பட்டம் பதவிகளை வழங்கினர்.”நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார். (12:54).
  • இவ்வாறு இந்த இரு நபிமார்களின் வரலாற்றிலும் ஏகப்பட்ட படிப்பினைகள் இருப்பதாக எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு சொல்லிக் காட்டுகின்றான்.
    நபி யூசுப்: (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (12:111).
  • நபி மூஸா: இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் – மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும்இ நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது). (28:43)
  • யூசுப் நபியின் வரலாறு எகிப்துக்கு வெளியில் பலஸ்தீன தேசத்தில் ஆரம்பித்து எகிப்தில் முடிவடைந்தது.
  • மூஸா நபியின் வரலாறு எகிப்தில் ஆரம்பித்து எகிப்துக்கு வெளியில் பலஸ்தீன தேசத்தில் முடிவடைந்தது.

 

M. Riskhan Musteen
Saudi Arabia

Check Also

நீர் புகட்டுதலும், மூஸா நபியின் திருப்பமும்

நீர் புகட்டுதலும், மூஸா நபியின் திருப்பமும் அஷ்ஷைக் ஹிஸ்புல்லாஹ் அன்வாரி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe …

Leave a Reply