Home / அகீதா (ஏனையவைகள்) / இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் தொடர் 1| கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் தொடர் 1| கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم

القواعد الأربع للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي

இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள்

இமாம் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்)

அரபு நுாலின் மொழிபெயர்ப்பும் விளக்கமும்

தொடர் 1

ஆசிரியர் குறிப்பு

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் நான்கு அடிப்படைகள் என்ற நுாலைத் தொகுத்துள்ளார்கள்.

சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாதிலிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உயைனா என்ற ஊரில் இந்த அறிஞர் ஹிஜ்ரீ 1115 ம் ஆண்டு பிறந்தார்.

சிறுவயதிலேயே குா்ஆனை முழுமையாக மனனமிட்டார். மார்க்கக்கல்வியை சிறப்பாக கற்றுத்தேர்ந்து தான் மரணிக்கும் வரை அழைப்புப் பணி செய்தவர். அன்னாருடைய காலத்தில் இணைவைப்பும் பித்அத்களும் இஸ்லாமியர்களிடம் அதிகமாக பரவி இருந்தது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் இந்த வழிகேடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட துன்பங்களையும் இன்னல்களையும் சகித்துக்கொண்டார்.

அப்போது சவூதியின் அமீராக முஹம்மது இப்னு சவூத் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். அமீர் அவர்கள் அறிஞர் முஹம்மது இப்னு  அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.. இதனால் இணைவைப்பும் பித்அத்களும் ஒழிந்து மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கி நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றலானார்கள்.

இந்த மறுமலர்ச்சி அரபு நாட்டுடன் நின்றுவிடவில்லை. இந்த அறிஞர் அரபுமொழியில் பல்வேறு நுாற்களை தொகுத்துள்ளார். அவை அனைத்தும் அதிக பலன்களைக் கொண்டவை. அரபு அல்லாத நாடுகளிலும் தவ்ஹீத் புரட்சி ஏற்படுவதற்கும் இவர்கள் எழுதிய நுாற்களே அடிப்படையாகும்.

ஸலாசத்துல் உசூல் வஅதில்லதுஹா (இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும்) கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவ நுால்) அல்கவாயிதுல் அர்பஉ (நான்கு அடிப்படைகள்) ஃபள்லுல் இஸ்லாம் (இஸ்லாமின் சிறப்புகள்) கஸ்புஸ் சுபுஹாத் (சந்தேகங்களை தெளிவுபடுத்துதல்) ஆகிய நுாற்கள் இஸ்லாமிய கொள்கையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் நுாற்களாகும். இவையல்லாத வேறு பல நல்ல நுாற்களையும் தொகுத்துள்ளார். ஹிஜ்ரீ 1206 ம் வருடத்தில் மரணித்தார்கள். அல்லாஹ் இவர்களது பாவத்தை மன்னித்து சொர்க்கத்தை வழங்குவானாக.

இவர்கள் தொகுத்த நான்கு அடிப்படைகள் என்ற நுால் குறித்து சிறு குறிப்புகளை அறிந்துகொள்வோம்.

நுாற்குறிப்பு

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ கலிமாவை மொழியும் பலர் இக்கலிமாவிற்கு நேர் எதிரான இணைவைப்புக்காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்தக் கலிமாவை மறுக்க வேண்டும் என்றோ இதற்கு நேர்எதிராக நடக்க வேண்டும் என்றோ இவர்கள் நினைப்பதில்லை. இஸ்லாமை கடைபிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்தாலும் இணைவைப்பைப் பற்றிய சரியானத் தெளிவு இவர்களிடம் இல்லை.

தவறான காரணங்களை கற்பித்துக்கொண்டு தாம் இணைவைக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கின்றனர். எனவே இவர்கள் ஒருபக்கம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்துகொண்டும் இன்னொரு பக்கம் இணைவைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.

இன்னொரு சாரார் இணைப்பிலிருந்து முழுமையாக விலகியிருப்பார்கள். ஆனால்  இவர்கள் மேலே நாம் குறிப்பிட்ட சாரார் செய்யும் செயலை இணைவைப்பு என்றொ அல்லது அவர்களை இணைவைப்பாளர்கள் என்றோ கூறமாட்டார்கள். மற்றவர்கள் இவ்வாறு கூறுவதையும் தடைசெய்வார்கள்.

இவர்களும் இணைவைப்பைப் பற்றி சரியாக அறியாதவர்கள் ஆவர். இந்நிலையில் உள்ளவர்கள் தற்போது இணைவைக்காவிட்டாலும் காலப்போக்கில் இணைவைப்பில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஓரிறைக் கலிமாவை மொழிந்த நாம் எக்காலத்திலும் இணைவைப்பில் விழாமல் இருக்க வேண்டும். அப்படியானால் நான்கு மிக முக்கியமான அடிப்படைகள் அறிந்துகொண்டாலே இது சாத்தியம்.

ஷிர்க்கிலிருந்து நாம் முழுமையாக விலகுவதற்கு இரண்டு விசயங்களை அறிய வேண்டும்.

  1. நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்க அறிவு இருந்தால் இணைவைப்பிலிருந்து தப்பிக்கலாம்.
  2. இத்துடன் நபி(ஸல்) அவர்கள் யாருக்கு அழைப்புப் பணிச் செய்தார்களோ அந்த இணைவைப்பாளர்களின் கொள்கை செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டாலும் இணைவைப்பிலிருந்து தப்பிக்கலாம். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இணைவைப்பாளர்கள் பற்றி தெளிவுபடுத்துவதே இந்த நுாலின் சாராம்சம். இது நான்கு அடிப்படைகளைக் கொண்டது.

அல்லாஹ் நம் அனைவரையும் இப்பெரும்பாவத்திலிருந்து காபாற்றுவானாக!

அப்பாஸ் அலீ Misc

நுாலாசிரியரின் முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரில்லா அன்புடையோனுமான அல்லாஹ்வின் பெயரால் (துவங்குகிறேன்)

அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்.

மகத்தான் அர்ஷிற்குரிய இறைவனும் சங்கைக்குரியோனுமான அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் உங்களுக்கு பொறுப்பேற்பானாக! நீங்கள் எங்கிருந்தாலும் பாக்கியம் (பரகத்) பொருந்தியவனாக உங்களை ஆக்குவானாக!

  1. தனக்கு கொடுக்கப்பட்டால் நன்றி செலுத்தபவராகவும்
  2. தான் சோதிக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளக்கூடியவராகவும்
  3. குற்றமிழைத்தால் பாவமன்னிப்புத் தேடுபவராகவும் அல்லாஹ் உங்களை ஆக்குவானாக!

இந்த மூன்று விசயங்களே நற்பாக்கியத்தை அடைவதற்கான வழிகள்.

அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டுநடக்க அவன் உங்களுக்கு வழிகாட்டுவானாக! இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية)  என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும். அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் இதையே ஏவியுள்ளான். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான்.

   51وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ (56)

ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை.

அல்குா்ஆன் (51 56)

அல்லாஹ் உங்களை அவனை வணங்குவதற்காகவே படைத்தான் என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். இதன்பின் இபாதத் (வணக்கம்) என்பது ஓரிறைக்கொள்கை இருந்தாலே அது வணக்கம் என்று சொல்லப்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உளூஉள்ள நிலையில் உளூவை முறிக்கும் காரியங்கள் ஏற்பட்டால் உளூ முறிந்துவிடுவதைப் போன்று ஒருவர் வணங்குவதுடன் அவரிடம் இணைவைப்பு சேர்ந்துவிட்டால் அந்த வணக்கம் பாழாகிவிடும்.

எனவே இணைவைப்பு வணக்கத்துடன் கலந்தால் அது வணக்கத்தை பாழாக்கிவிடும். அமலை அழித்துவிடும். இணைவைத்தவர் நிரந்தர நரகத்திற்குரியவராகிவிடுவார். இதை நீங்கள் அறிந்துகொண்டால் நீங்கள் கட்டாயம் அறிய வேண்டிய விசயத்தை அறிந்துகொண்டவராவீர்கள். இந்த ஆபத்தான வலையிலிருந்து அல்லாஹ் உங்களை விடுவிக்கலாம்.

அல்லாஹ்விற்கு இணைகற்பிப்பதே அந்த வலையாகும். இதைப் பற்றியே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ (48)4

தனக்கு இணைகற்பிப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதுவல்லாதவற்றை தான் நாடியவர்களுக்கு அவன் மன்னிப்பான்.

அல்குா்ஆன் (4 48)

அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ள நான்கு அடிப்படைகளை அறிந்துகொள்வதின் மூலமே இந்த இணைப்பிலிருந்து விடுபட முடியும்.

விரிவுரை

  1. பரகத் (அபிவிருத்தி) என்பது நன்மைகள் நிறைந்திருப்பதும் அவை நிலைத்திருப்பதையும் குறிக்கும் சொல்லாகும்.
  2. அல்லாஹ் ஒருவனை மட்டுமே முன்னோக்கி வழிபடுதல் என்பது ஹனீஃபிய்யா (الحنيفية)  என்ற சொல்லின் பொருளாகும். இப்பதத்தை அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கூறியுள்ளான். இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
  1. மக்கத்து இணைவைப்பாளர்கள் தாங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தின் இருப்பதாகவும் அவர்களே தங்களுடைய தந்தை என்றும் கூறிவந்தனர். எனவே அல்லாஹ் இக்கொள்கையை இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இணைத்து அவர்களிடம் பேசினான்.
  2. இப்ராஹீம் (அலை) அவர்களை அவர்களுக்குப் பிறகு வந்த நபிமார்களுக்கு இமாமாக (தலைவராக) அல்லாஹ் நியமித்தான். இச்சிறப்பு அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவன் வழங்கவில்லை.
  3. இப்ராஹீம் (அலை) அவர்கள் ஓரிறைக்கொள்கையை கடைபிடிப்பதில் மற்ற அனைவரையும் காட்டிலும் உயர்வான நிலையை அடைந்தார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் நண்பன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களின் பரம்பரையில் வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் இந்நிலையை அடையவில்லை. மகனை விட தந்தை முற்படுத்தப்படுவார் என்ற அடிப்படையில் ஹனீஃபிய்யா என்பது இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
  1. இபாதத் என்ற பதம் இரு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  1. இறைவன் விரும்புவதை செய்வதும் அவன் வெறுப்பதை விட்டும் விலகி இருப்பதும் வணக்கம் (இபாதத்) ஆகும்.
  2. அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடுதலும் இபாதத் ஆகும். அதாவது தவ்ஹீத் என்ற பொருளிலும் இபாதத் என்ற சொல் பயன்படுத்தப்படும்.
  1. தவ்ஹீத் என்றால் அல்லாஹ்விற்குரிய உரிமைகள் அனைத்தும் அவன் ஒருனுக்கு மட்டுமே உரியது என்று நம்புவதும் இவற்றில் எந்த ஒன்றையும் பிறருக்கு உண்டு என நம்பாமல் இருப்பதாகும். அல்லாஹ்வின் உரிமைகள் மூன்று வகைப்படும். இதனடிப்படையில் தவ்ஹீத் மூன்று வகைப்படும்.
  1. தவ்ஹீதுர் ருபூபிய்யா – அகிலம் முழுவதையும் படைத்து பரிபாலிக்கும் காரியங்கள் அல்லாஹ் ஒருவன் மட்டுமே செய்கிறான். இதை வேறு யாரும் செய்யவில்லை என்ற நம்பிக்கை. உதாரணமாக மழை பொழிய வைத்தல் உணவளித்தல் துன்பங்களை நீக்கும் வானம் பூமி அழிந்துவிடாமல் அவற்றை சீராக செயல்பட வைத்து நிர்வகித்தல் மரம் செடி கொடி அனைத்து உயிரினங்களையும் படைத்தல் ஆகிய காரியங்களே படைத்து பரிபாலித்தலாகும். இது இறைவன் செய்கின்ற காரியங்களாகும்.
  2. தவ்ஹீதுல் உலுாஹி்ய்யா – வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நிறைவேற்றுதல். அவனல்லாத வேறு யாருக்கும் அதை நிறைவேற்றாமல் இருத்தல். இது படைப்பினங்கள் செய்ய வேண்டிய காரியமாகும். உதாரணமாக அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்தல். அவனுக்கு மட்டுமே அறுத்துப் பலியிடுதல் அவனுக்கு மட்டுமே நோ்ச்சை செய்தல் ஆகியவை சில வணக்கங்களாகும்.
  3. தவ்ஹீதுல் அஸ்மாஉ வல்ஸிஃபாத் – அல்லாஹ்விற்கு மட்டும் பிரத்யேகமாக சில பெயர்களும் பண்புகளும் உள்ளன. உதாரணமாக அல் ஹய் (நித்திய ஜீவன்) அல்கய்யூம் (நிலைத்திருப்பவன்) அஸ்ஸமத் (தேவையற்றவன்) அஹத் (தனித்தவன்) ஆகிய பெயர்களைக் கூறலாம். குழந்தை இல்லை மனைவி இல்லை உறக்கம் இல்லை பலவீனம் இல்லை மறதி இல்லை அனைத்தையும் அறிதல் ஆகியவை அல்லாஹ்வின் பண்புகளாகும். இதுபோன்ற பண்புகள் பெயர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நம்ப வேண்டும்.
  1. தவ்ஹீதிற்கு முற்றிலும் முரணான ஷிர்க் என்பதும் மூன்று வகைப்படும்.
  1. ருபூபிய்யாவில் இணைவைத்தல்
  2. உலுாஹிய்யாவில் இணைவைத்தல்
  3. அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத்தில் இணைவைத்தல்
  1. மேலும் ஷிர்க் (இணைவைப்பு) என்பது அது ஏற்படுத்தும் விளைவை கவனித்தால் அதனை இரு வகைகளாக பிரிக்கலாம்.
  1. பெரிய இணைவைப்பு – அல்லாஹ்விற்குரிய உரிமை மற்றவர்களுக்கு வழங்குதல். இதனால் இக்காரியத்தை செய்பவர் ஈமானை விட்டும் இஸ்லாமை விட்டும் முழுமையாக வெளியேறிவிடுவார். உதாரணமாக அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்வது பெரிய இணைவைப்பாகும். இது நிரந்தர நரகத்தில் தள்ளும்.
  2. சிரிய இணைவைப்பு – அல்லாஹ்விற்குரிய உரிமை மற்றவர்களுக்கு வழங்குதல். இதனால் இக்காரியத்தை செய்பவர் ஈமானை விட்டும் இஸ்லாமை விட்டும் முழுமையாக வெளியேறிவிடமாட்டார். மாறாக ஈமானிய குறைபாடு உடையவராகவும் பாவியாகவும் ஆகிவிடுவார். உதாரணமாக அல்லாஹ்விற்காக தொழுதுகொண்டிருப்பவர் தன் எண்ணத்தை மாற்றி பிறரிடம் நற்பேறு வாங்குவதற்காக தொழுதல் சிறிய இணைவைப்பாகும். இதுவும் பாவம் என்றாலும் இது நிரந்தர நரகத்தில் தள்ளாது. இறைவன் நாடினால் இத்தகையோரை நரகத்தில் தண்டிக்கலாம். அவன் நாடினால் மன்னிக்கலாம்.

தொடரும் இன்ஷாஅல்லாஹ்..

 

 

Check Also

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 12 |

அகீதா – அறுந்து போகாத வலுவான பிடிமானம் | பாடம் – 12 | அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸி ஜித்தா …

Leave a Reply