Home / ஃபிஹ்க் ஏனையவைகள் / பஜ்ருடைய சுன்னத்தினுடன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான சட்டதிட்டங்கள்

பஜ்ருடைய சுன்னத்தினுடன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான சட்டதிட்டங்கள்

بسم الله الرحمن الرحيم.

-மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி

பஜ்ருடைய சுன்னத்தின் சிறப்புகள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“பஜ்ரடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களும் இந்த உலகம், அதிலுள்ளவைகளை விடவும் சிறப்புக்குரியதாகும்”
(முஸ்லிம்)

பஜ்ருடைய சுன்னதில் இருக்கின்ற சில முக்கியமான குறிப்புகள்:-

இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

“இந்த இரண்டு ரக்அத்களும் சில முக்கியமான விடயங்களால் விஷேடப்படுத்தப்படுத்தப்படுகின்றது:-

1 வது:- இவ்விரண்டு ரக்அத்களும் ஊரில் இருக்கின்ற போதும் பிரயாணியாக இருக்கின்ற போதும் தொழுவது மார்க்கமாக்கப்பட்டுள்ளது.

2 வது:- இவ்விரண்டு ரக்அத்களதும் கூலி இவ்வுலகம் அதிலுள்ளவைகளை விடவும் சிறந்ததாகும்.

3 வது:- இவ்விரண்டு ரக்அத்களையும் முடிந்தளவு இலகுவாக தொழுது கொள்ள வேண்டும். என்றாலும் அதில் செய்ய வேண்டிய வாஜிப்களுக்கு பங்கம் ஏற்படுகின்ற வண்ணம் அமைத்துக் கொள்ளக்கூடாது என்று நிபந்தனையிடப்பட்டுள்ளது.

4 வது:- இவ்விரண்டு ரக்அத்களிலும் ஓத வேண்டியவை :

1 வது ரக்அத்தில் சூரதுல் காபிரூன்

2 வது ரக்அத்தில் சூரதுல் இஹ்லாஸ்

அல்லது

1 வது ரக்அத்தில்
{قولوا آمنا بالله وما أنزل إلينا…}
2:136 என்ற வசனத்தை முழுமையாக ஓத வேண்டும்.

2 வது ரக்அத்தில்
{فلما أحس عيسى منهم الكفر…}
3:52 என்ற வசனத்தை முழுமையாக ஓத வேண்டும்.

(அஷ் ஷரஹுல் மும்திஃ 1/407)

இமாம் இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹுஅவர்களும் இவ்விரண்டு ரக்அத்களிலும் இந்த சூராக்களையே ஓத வேண்டுமென்று மஜ்மூஃ பதாவா (11/405) வில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

பஜ்ருடைய இரண்டு ரக்அத் சுன்னத்தில் சூரதுல் பாத்திஹாவை மாத்திரம் ஓதுவதன் சட்டம் என்ன?

இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்
“பஜ்ருடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களையும் பாத்திஹாவுடன் மாத்திரம் சுருக்குவதில்
பிரச்சினை கிடையாது”
(மஜ்மூஃ பதாவா 13/155)

பஜ்ருடைய சுன்னத்தின் 2 ரக்அத்களையும் நீட்டுவதன் சட்டம் என்ன?

இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்:
“துஆக்கள் மறுக்கப்படாத அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட அந்த நேரம் சிறப்பாக இருப்பதனால் ஒருவர் பஜ்ருடைய சுன்னத்தின் இரண்டு ரக்அத்களையும் கிராஅத்தைக் கொண்டு, ருகூவைக் கொண்டு, ஸுஜூதைக் கொண்டு நீட்டித் தொழ நாடினால் அவருக்கு நாம் நீர் சரியான முறைக்கு மாற்றம் செய்துவிட்டீர் என்று கூறுவோம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும் இலகுவான முறையில் தொழக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்”
(ஷரஹுல் மும்திஃ 1/407)

பஜ்ருடைய சுன்னத் தவற விடப்பட்டவருக்கான சட்டம் என்ன?

இமாம் இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹு அவர்கள் 2 முறைகளை சொல்லித் தருகிறார்கள்:

!. அந்த தொழுகையை பஜ்ர் தொழுகையை தொழுத பின் தொழுது கொள்ள முடியும்.

!!. அல்லது சூரியன் உதித்ததன் பின் வரை தாமதப்படுத்தி பின்னர் அந்த இரண்டு ரக்அத்களையும் தொழுது கொள்ளலாம்.

ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸூன்னா இரு இந்த முறைகளையும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. என்றாலும் மிகச் சிறந்த நேரம் எதுவென்றால் சூரியன் உதித்ததன் பின் வரை தாமதப்படுத்தப்படுவதாகும்.
(மஜ்மூஃல் பதாவா 11/373)

இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

“பஜ்ருடைய தொழுகைக்கு முன்னால் அதனுடைய ஸுன்னத் தொழுகையை தொழுவது ஒருவருக்கு தவறினால் அவர் அதனை இரு முறைகளில் தொழுது கொள்ளலாம்

!. பஜ்ருடைய தொழுகையை தொழுது அதற்கு பின்னால் ஓத வேண்டியகளை நிறைவேற்றிவிட்டு தொழுது கொள்ள முடியும்.

!!. தவறிய அந்த சுன்னத்தை ழுஹாவுடைய நேரம் வரை தாமதப்படுத்த முடியும்.

(மஜ்மூஃல் பதாவா 14/282)

ஒருவருக்கு பஜ்ர் தொழுகை தவறவிடப்பட்டு அவர் தொழுகையை தனியாக நிறைவேற்றுகின்ற போது முதலில் சுன்னத்தைக் கொண்டு ஆரம்பிப்பது விரும்பத்தக்கதா? அல்லது பஜ்ரைத் தொழுவது விரும்பத்தக்கதா?

இமாம் இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது ஸஹாபாக்களும் சில பிரயாணங்களில் ஸுபஹ் தொழுகை தவறிய சந்தர்ப்பத்தில் அவர்கள் செய்தது போன்று முதலாவது பஜ்ருடைய சுன்னத்தை
ஆரம்பிக்க வேண்டும். பின்னர் பஜ்ர் தொழுகையை தொழுது கொள்ள வேண்டும்.
(மஜ்மூஃல் பதாவா 11/377)

பிரயாண நேரத்தில் பஜ்ருடைய சுன்னத்தை விட்டு விடலாமா?

இமாம் இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

“வித்ருத் தொழுகை, பஜ்ருடைய சுன்னத் தொழுகையை தவிர மற்றைய முன் பின் சுன்னத்துகளை விட்டு விடுவது மார்க்கமாக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுவான சில சுன்னத்துகள், காரணங்களுக்காக தொழப்படுகின்ற தொழுகைகள்(தஹிய்யதுல் மஸ்ஜித், வுழுவுடைய சுன்னத்) ஆகியவைகளை ஊர்வாசியாக இருக்கும் போதும் பிரயாணியாக இருக்கின்ற போதும் தொழுவது மார்க்கமாக்கப்பட்டுள்ளது.

(மஜ்மூஃல் பதாவா 11/391)

கடமையான தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது போன்று பஜ்ருடைய சுன்னத்தையும் அதனுடைய நேரத்தில்தான் தொழ வேண்டுமா?

இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

“பஜ்ருடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களும், பஜ்ருடைய தொழுகை போன்றாகும். எனவே அதனை பஜ்ருடைய நேரம் உதயமாகினாலே அன்றி தொழ முடியாது.”

(மஜ்மூஃல் பதாவா 14/276)

ஒருவர் பஜ்ருடைய சுன்னத்தை வேண்டுமென்ற தவற விட்டு விட்டு பின்னர் அதனை கழா செய்வதன் சட்டம் என்ன?

அதனுடைய நேரம் முடிவடைகின்ற வரை அதனை வேண்டுமென்றே விட்டு விட்டால் அதனை கழா செய்ய முடியாது. அவ்வாறு அதனை கழா செய்தாலும் அது முன் பின் சுன்னதாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் முன் பின் சுன்னத்துகள் நேரம் குறிக்கப்பட்ட வணக்கமாகும். நேரம் குறிக்கப்பட்ட வணக்கங்களை ஒரு மனிதன் அதனுடைய நேரங்களை விட்டு அதை வெளியேற்றினார்கள் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
(ஷரஹுல் மும்திஃ 4/73)

பஜ்ருடைய சுன்னத்திற்குப் பின் சற்று சாய்ந்து கொள்வது சுன்னாவில் உள்ளதா?

வெளிப்படையாக யாருக்கு சக்தியிருக்கின்றதோ அவர் மீது அது ஸுன்னாவாகும். உதாரணம் ஒரு மனிதர் களைப்படைந்து இருக்கின்றார். பஜ்ருடைய தொழுகையை சக்தியுடன் தொழ வேண்டுமென்பதற்காக சாய்ந்து ஒய்வெடுப்பதை விரும்புகிறார் (இவர் மீது சாய்ந்து கொள்வது ஆகுமாகும்).

யாருக்கு அவ்வாறு செய்வது அவசியமில்லையோ அவர்கள் மீது அவசியமில்லை. அதே போன்று ஒருவர் அவ்வாறு சாய்ந்து உறங்கினால் சூரியன் உதயமாகினாலே தவிர எழும்ப முடியாதென்றால் அவர்கள் சாயக்கூடாது.

(லிகாவுல் பாபுல் மப்தூஹ்)

பஜ்ருடைய சுன்னத்து தவறி அதனை கடமையான தொழுகைக்கு பின் தொழ வேண்டுமா அல்லது தடுக்கப்பட்ட நேரம் சாய்கின்ற வரை தாமதப்படுத்த வேண்டுமா?

இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

“பஜ்ருடைய சுன்னத்தை கடமையான தொழுகையை நிறைவேற்றி திக்ருகளை முடித்ததன் பின்னர் தொழுவது மனிதர்கள் மீது ஆகுமாகும்”

(மஜ்மூஃல் பதாவா 14/275)

பஜ்ருடைய சுன்னத்தை தொழுதால் தஹிய்யதுல் மஸ்ஜித்(பள்ளியின் காணிக்கை) தொழுகையை தொழ வேண்டுமா?

இமாம் இப்னு பாஸ் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள்

“இதில் மார்க்கமாக்கப்பட்ட விடயம் என்னவென்றால் முன் பின் சுன்னத்துகளை தொழுவது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையை விட்டும் போதுமாகும்.

எனவே இப்படிப்பட்ட சட்டங்களைக் கொண்ட இத்தொழுகையை முறையாக தொழுது அல்லாஹ்விடத்தில் உயர்தரமான கூலியைப் பெற்று கொள்வோமாக.

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் வேறு தலைப்புகளில் முக்கியமான சில விடயங்களை அவதானிப்போம் இன்ஷா அல்லாஹ்…

Check Also

தௌபாவுக்கான தொழுகை | Assheikh Abdul Azeez Mursi |

வழங்குபவர்: அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் முர்ஸி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated …

Leave a Reply