Home / Islamic Centers / Riyadh Islamic Center - KSA / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-26)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-26)

அனைத்திலிருந்தும் அவளுக்கு வழங்கப்பட்டுள்ளது. {وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ} [النمل: 23] பலவேறுபட்ட சாதனங்களை வைத்திருப்பது பரிபூரண ஆட்சியின் அடையாளமாகும்.

பில்கீஸ் ராணி படை, ஆயுதம், சொத்து, கட்டிடங்கள் என அவளது ஆட்சிக்கு அவசியமான அனைத்து வசதிகளும் பெற்றிருந்தாள்.

ஒரு அரசன் உலக அடிப்படையில் பரிபூரண ஆட்சியைப் பெறவேண்டுமானால் அறிவாற்றல், ஞானம், படை, ஆயுதம், யுத்த நுணுக்கங்கள் என பல்வேறுபட்ட சாதனங்களை அவன் பெற்றிருக்க வேண்டும்.

அல்லாஹ் தாவூத் (அலை) அவர்களைப் பற்றி அவருக்கு அல்லாஹ் ஆட்சியையும், ஞானத்தையும் வழங்கினான். மேலும் தான் நாடியவற்றிலிருந்து அவருக்குக் கற்றுக் கொடுத்தான். (அல்பகரா:251) எனக் குறிப்பிடுகிறான். துதிசெய்யக் கூடிய நிலையில் மலைகளையும், பறவைகளையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான். கேடயங்களை செய்வதற்கு இரும்பை மிருதுவாக்கிக் கொடுத்தான். அவர்தான் முதன் முதலில் அவற்றை செய்தவராவார்.

தாவூத் (அலை) அவர்களிடமிருந்து சுலைமான் (அலை) அவர்கள் அனந்தரமாக எடுத்தார்கள். மேலும் கூறினார்கள்: மனிதர்களே! எமக்கு பறவைகளின் மொழி கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும் நாம் அனைத்திலிருந்தும் வழங்கப்பட்டுள்ளோம். நிச்சயமாக இதுதான் தெளிவான உபகாரமாகும். (அந்நம்ல்:12) என அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளான்.

அல்லாஹ் அவருக்கு காற்றையும், ஜின்னையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவர்களுக்காக வேண்டி ஒரு மாதம் முழுமையாக செம்பு ஊற்றை ஓடச் செய்தான். அதன் மூலம் அவர்கள் அழகான கட்டிடங்களையும், ஓவியங்களையும், பாரிய குடங்களையும் உருவாக்கினார்கள்.

துல்கர்னைனைப்பற்றி குர்ஆன் இவ்வாறு உரைக்கிறது: இப் பூமியில் நாம் அவருக்கு வசதி செய்து கொடுத்தோம். மேலும் நாம் அவருக்கு அனைத்தினது அறிவையும் வழங்கியிருந்தோம். (கஹ்ப்:84) மதில் அமைப்பதையும் அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்தான். இரு மலைகளுக்கு மத்தியில் இரும்புப் பாலங்களை வைத்து அவற்றிற்கு மத்தியில் விரகுகளை வைத்து இரும்பு பழுக்கும் வரை அவைகளை எரித்தார்கள். பின்பு உருக்கிய செம்பை அதன் மீது ஊற்றினார்கள். எனவே அது யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரால் துளையிட முடியாத அல்லது வெளியேற முடியாத அளவுக்குக் கடினமான பாதுகாப்பரணாக மாறிவிட்டது. மேலும் அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும் வழங்கியிருந்தான். அதனால் அவர்கள் நீதியை நிலைநாட்டி நலவைப் பரப்பி அட்டூழியத்தை ஒழித்தார்கள்.

Check Also

ரமலானில் யாருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படும்?

அஷ்ஷெய்க் அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப …

Leave a Reply