Home / கட்டுரை / கட்டுரைகள் / ஸஃபர் மாதம் பீடையா?

ஸஃபர் மாதம் பீடையா?

ஸஃபர் மாதம் பீடையா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரார்,

அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகத்திற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையைப் பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர்மீதும் உண்டாவதாக 

காலத்தைத் திட்டுவதும் பீடையாகக் கருதுவாதும் அல்லாஹ்வையே நோவினை செய்வதாகும். 

அல்லாஹ்வை நோவினை செய்யும் ஒருவன் சந்திக்கும்மோசமான 

விளைவுகளைப்  பின்வரும் அல்குர்ஆன் வசனம் மிகத் தெளிவாக விளக்குகின்றது.

 

 إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّـهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّـهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا

          “எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்.மேலும், அவர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.” ( அல் அஹ்ஜாப் 33: 57 )

عَنْ اَبِي هُرَيْرَةَ, رَضِيَ اللهُ عَنْهُ, قَالَ:

قَالَ رَسُولُ اللهِ صَّلى الله عليه وسلم :قَالَ: اللهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ ادَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِي الْاَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ ( البحاري , و مسلم )

 

          அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: “ ஆதமுடைய மகன் (மனிதன்) காலத்தைத்  திட்டுவதன் மூலம் என்னை நோவினை செய்கின்றான்.நானோ காலமாக இருக்கிறேன், அதிகாரம் என் கையில் உள்ளது, நானோ இரவு, பகலை மாறி மாறி வரச் செய்கின்றேன்.

(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் ,புஹாரி, முஸ்லிம் )

ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக் கூடாது என்றும், பீடையைக் கழிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன் கிழமைஆற்றில் குடும்பத்துடன் குளித்து இன்னும் இது போன்ற பல சடங்குகளையும் செய்து அந்தப் பீடையை போக்க வேண்டும் என்று எண்ணி பல சடங்குகள், சம்பிரதாயங்களைஸஃபர் மாதத்தில் நமது இஸ்லாமிய பல சகோதர சகோதரிகள் செய்கின்றார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும், மூட நம்பிக்கையும் ஆகும்.இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கைகளை விட்டுவிட்டு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்ப வேண்டும். ஸஃபர் மாதம்பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறைவசனமோ நபி மொழியோ கிடையாது. மாறாக ஸஃபர்மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதைத் தடுக்கும் நபி மொழியைத் தான் பார்க்க முடிகின்றது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي الله عنه عَنِ النَّبِيِّ صلى عليه وسلم قال: لَا عَدْوَى , وَلَا طِيَرَةَ , وَلَا هَامَةَ , وَلَا صَفَرَ

           இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ தோற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடைஎன்பதும் கிடையாது”. என அபூஹுரைரா (ரழி)  அறிவித்தார். (ஆதாரம் : புஹாரி )

 

ஸஃபர் மாதத்தை பீடையுள்ள மாதம் என்பதற்கு, இந்த மூட நம்பிக்கையுள்ளவர்கள் கூறும் காரணம், நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில்நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதம் ஆகும், மூன்றாம் வாரத்தில்நபி (ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தது போல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும்தவறான வாதம் ஆகும். நோயுறுவது பீடையா? மாறாக இது அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்ததென்று நம்புபவன் தான் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியும்.

அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடும் பொது,

قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّـهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّـهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ   

           “ ஒரு போதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும் ) எங்களை அணுகாது, அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்’ என்று (நபியே) நீர் கூறும், முஃமின்கள்அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!” ( அத்தவ்பா  9 : 51 )

 

நபி (ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள், ரபீஉல் அவ்வல் மாதத்திலும் தான் நோயுற்றிருந்தார்கள். இதை யாரும் மறுக்க முடியாது.நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 ல் மரணித்தார்கள். அந்த நாளையாரவது பீடையுள்ள மாதம் என்று கூறுகின்றார்களா? அதை கொண்டாடும் நாளாக அல்லவா எடுக்கிறார்கள். ஏன் இவர்கள் தங்களுக்குள்ளேமுரண்பட்டுகொள்கின்றார்கள்!

ஆகவே ஸஃபர் மாதத்தையும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதமாக நினைத்து நமது அன்றாட காரியங்களை செய்ய வேண்டும். ஸஃபர் மாதத்தில் ஏதும்சோதனைகள் வந்தால் கூட அது ஸஃபர் மாத்தினால் ஏற்படவில்லை, அல்லாஹ்வின் ஏற்பாட்டினால்தான் வந்தது என்று நம்ப வேண்டும்.

 

நமது வாழ்வில் மூட நம்பிக்கைகளை ஒழித்து, ஊர் வழமை என்று கண் மூடித் தனமாக எதுவும் செய்யாமல் அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் பின்பற்றும்உண்மையான முஸ்லிம்களாக மாறுவோமாக. நமது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என உறுதியாக நம்புவோமாக.

Check Also

நூல் முஹ்தஸர் ஃபிக்ஹுஸ் ஸவ்ம் – பாகம் 01

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி நூலாசிரியர்: அஷ்ஷைக் அலவி இப்னு அப்துல் காதர் அஸ்ஸக்காஃப் ஹஃபிழஹுல்லாஹ் Subscribe to …

Leave a Reply