ரமழானின் இறுதிப் பத்தின் உச்சபயனை அடைய ஐந்து வழிமுறைகள்

❇ ரமழானின் இறுதிப் பத்தின் உச்சபயனை அடைய ஐந்து வழிமுறைகள் ❇

🖊மூலம்: கலாநிதி உமர் அல்முக்பில்

🗒தமிழில்: அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானீ

1⃣ உனது பலம் ஆற்றல் என்பவற்றிலிருந்து விடுபட்டுவிட வேண்டும். ஒரு அடியான் ஒரு தஸ்பீஹ் அல்லது ஒரு ரக்அத் அல்லது ஒரு ஆயத் ஓத வேண்டுமென்றாலும் கூட அல்லாஹ்வின் உதவியின்றி அது சாத்தியமற்றதாகும். ஒவ்வொரு ரக்அதிலும் நாம் ஓதும் “உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்ற வசனத்தைச் சிந்தித்தால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்பதை அதிகமதிகம் கூறிக்கொள்ள வேண்டும். ஏனெனில் நமது ஆற்றலில் தங்கியிருந்தால் பலவீனமும் இயலாமையுமே ஏற்படும். இறைவனிடம் உங்களுக்கு உதவி செய்யுமாறு பிரார்த்தனை செய்யுங்கள். அதுதான் நன்மை செய்வதற்கு ஆர்வம் ஏற்படுத்தும் மிக முக்கிய காரணியாகும்.

2⃣ இதற்குப் பிறகு இந்த ரமழானுடைய பாக்கியம் கிடைக்காதவனைப் போன்று இந்தப் பத்து நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபட வேண்டும். சடைவோ சோம்பலோ ஏற்பட்டால் இந்த நாட்களில் உள்ள லைலதுல் கத்ர் இரவின் ஒரு மணித்தியாலத்தில் செய்யும் வணக்கம் 3000 நாட்களில் (8 வருடங்களை விட அதிகமான காலம்) செய்யும் செயலுக்குச் சமனாகும் என்பதை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அந்த இரவின் ஒரு நிமிடம் 50 வருடங்களுக்குச் சமனாகும்.

3⃣ வீண் பேச்சு, விளையாட்டு இடம்பெறும் சபைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவும். பள்ளியிலோ வீட்டிலோ இறைவனைத் தனியாகத் தியானம் செய்யவும். தனக்குப் பொருத்தமானது எது என்பது அவரவருக்குத்தான் தெரியும். யாருக்கு இஃதிகாபில் ஈடுபட முடியுமோ அதுவே சாலச் சிறந்ததாகும். யாருக்கு முடியவில்லையோ அவர் தனித்திருந்து வணக்கத்தில் ஈடுபடுவதை விட்டுவிடவேண்டாம்.

4⃣ பல்வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும். அல்குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், தொழுகை, துஆ, அல்லாஹ்வின் அருட்கொடைகளைச் சிந்தித்தல் போன்ற இன்னோரன்ன வணக்கங்களை மாற்றி மாற்றிச் செய்வது சடைவையும் சோம்பலையும் போக்கும்.

5⃣ஏதாவது ஒரு குறிப்பிட்ட வணக்கத்தில் மும்முரமாக ஈடுபட அல்லாஹ்வின் உதவி கிட்டினால் தற்பெருமை கொள்வதை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அது செயல்களைப் பாழாக்கிவிடும். நம்மை விட சுறுசுறுப்புள்ள, அல்லாஹ்வை அஞ்சும் இன்னும் பலர் உள்ளனர் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். செயல்கள் அங்கீகரிக்கப்படுவதே முக்கியமாகும். மறுக்கப்படும் வெறும் அதிக செயல்களில் பயனில்லை.

Check Also

ரமழானில் இறுதிப் பகுதி சில வழிகாட்டல்கள் | Assheikh Ramzan Faris Madani |

ரமழானில் இறுதிப் பகுதி சில வழிகாட்டல்கள் விஷேட உரை தேதி : 13 – 02 – 2026 தலைப்பு …

Leave a Reply